அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 4 தினங்களாக அதிவேக காற்று வீசி வருகிறது. கடலுக்குள் பல்வேறு உவர் நீரில் வளரும் தாவரங்கள், பாசிகள் அதிகமாக காணப்படுகிறது. கடலில் காற்று வீசும் போது கடல் அலைகளால் பாசிகள் அறுத்துகொண்டு மிதந்து வந்து கடல் ஓரங்களில் ஒதுங்கி உள்ளன. இதனால் கடற்கரை முழுவதும் பாசிகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மீனவர் சங்கர் கூறுகையில், கடலுக்கு அடியில் பவள பாறைகள், பாசிகள், புல்கள் என பலவகைதாவரங்கள் உள்ளன. கரும்பு பாசி அதிகமாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் காணப் படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் பாசிகள் அலைகளின் வேகத்தில் அறுத்துக் கொண்டு கடல் ஓரங்களில் பசுமையாக படிந்துள்ளது. வழக்கமாக அதிக காற்று வீசும் காலங்களில் இதுபோன்று பாசிகள் அடித்து வருவது வாடிக்கை தான்’ என்றார்.
Source: Dinakaran