விருதுநகர் : பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டுமென, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அரசு சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வரும் தாய்மார்களும், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை அனுப்பி வைக்கும்போது, அவற்றில் ஆதார் எண் கட்டாயமாக இருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்கின்றன. இதை தொடர்ந்து பிறப்பு பதிவேட்டிலும், இறப்பு அறிக்கையிலும் ஆதார் எண் கட்டாயம் எழுத வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்களின் உறவினர்கள் மற்றும் இறந்த நபரின் உடலை வாங்க வரும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் துரைராஜ் கூறுகையில், ‘‘குழந்தை பிறந்தால் ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டம் மூலம் நகர்புறத்திற்கு 600, கிராமப்புறத்திற்கு 700 வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் தாய்மார்களிடம் காசோலை அல்லது பணமாக வழங்கப்பட்டது. இதை வங்கி கணக்கில் வரவு வைக்கவே வங்கி கணக்கு நகல், ரேஷன் கார்டு கேட்கப்படுகிறது. குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு அறிக்கையில் ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது’’ என்றார்.
Source: Dinakaran