ஊட்டி: ஊட்டியில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் அழுகின. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலை தணிக்க ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இவர்களை மகிழ்விக்க ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரோஜா பூங்காவில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதேசமயம்,இம்முறை போதிய மழை பெய்யாத நிலையில்,தனியாரிடம் இருந்து விலை கொடுத்தே லாரி தண்ணீர் வாங்கி மலர் செடிகளை தோட்டக்கலைத்துறையினர் காப்பாற்றினர்.எனினும், வழக்கத்தை காட்டிலும் குறைந்தளவே மலர்கள் பூத்திருந்தன.குறைந்தளவே மலர்கள் காணப்பட்ட நிலையில், ரோஜா பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இதனால்,ரோஜா செடிகளில் இருந்த குறைந்த அளவிலான மலர்களும் அழுகி உதிர்ந்தன.தற்போது, நாள் தோறும் ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் அழுகிவிட்டன. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஓரிரு நாளில் அழுகிய மலர்கள் அகற்றப்பட்டு, இரண்டாம் சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் பணி துவக்கப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinakaran