திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் பி.டி.ராஜன் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் மாரீஸ்வரி (27). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த செந்தில்முருகனுக்கும் 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மகள் பாவனா (8), மகன் விஸ்வா (6) உள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட செந்தில்முருகன் கடந்த ஆண்டு இறந்தார். இதையடுத்து மாரீஸ்வரி, தந்தை கணேசன் வீட்டில் வசித்து வந்தார். திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (30). தனியார் கூரியர் நிறுவன ஊழியர். இவருக்கும், மாரீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இது தந்தை கணேசனுக்கு தெரியவரவே மகளை கண்டித்தார். இதனால் தந்தையை வீட்டிலிருந்து மாரீஸ்வரி துரத்தினார். மேலும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைகளை மாரீஸ்வரி, கார்த்திக் ஆகியோர் அடித்து துன்புறுத்தினர். தாயின் கொடுமை தாங்காமல் பாவனா தூத்துக்குடியிலுள்ள தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார்.நேற்றுகாலை கணேசன், பேரன் விஸ்வாவை பார்ப்பதற்காக மகளின் வீட்டிற்கு சென்றார். பேரனுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. விஸ்வாவிடம் கேட்டபோது, தாய் மாரீஸ்வரி, கார்த்திக் ஆகியோர் அடித்து துன்புறுத்தி, சூடு வைத்ததாக தெரிவித்தார். பேரனை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த கணேசன், இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாரீஸ்வரியை கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
Source: Dinakaran