சிவகங்கை: சிவகங்கை அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு பல்வேறு கிராமங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சிவகங்கை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததோடு, சூறைக்காற்றும் வீசியது. அரை மணிநேரத்திற்கும் அதிகமாக வீசிய சூறைக்காற்றால், சிவகங்கை அருகே இளையான்குடி சாலையிலுள்ள கூத்தாண்டன், ஊத்திக்குளம், செங்குளம், பூவாளி மற்றும் வேம்பங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரம் இருந்த 30க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சில வீடுகளின் மேற்கூரைகள் முற்றிலும் சேதமடைந்தன.மின் கம்பங்கள் மீதும் மரங்கள் விழுந்தன. இரவு நேரம் என்பதால் உடனடியாக மரங்களை அகற்ற முடியவில்லை. இரவு முழுவதும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். நேற்றுகாலை மரங்கள் அகற்றப்பட்டு, மின்கம்பங்கள் சரி செய்யும் பணி நடந்தது. பூவாளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் கூறுகையில், ‘மழையை விட காற்று அதிகமாக இருந்தது. காற்றின் வேகம் கடுமையாக இருந்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதிகாரிகள் பாதிப்பை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.
Source: Dinakaran