திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் சிமென்ட் பொடிகள் தூவப்படுகிறது. காற்று மாசுபாடு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் நடக்கின்றன. இதை தவிர்க்க சிமென்ட் பொடி தூவியதும் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் தெளிக்கப்படுவதில்லை. தண்ணீர் தெளிக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆலத்தம்பாடி கடைத்தெருவில் தேமுதிகவினர் ஏற்பாட்டின்பேரில் பொதுமக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Source: Dinakaran