மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்றுமாலை நடுரோட்டில், ஆண் சட்டை அணிந்த இளம்பெண் ஒருவர் வாகனங்களை, ‘அப்படி போ… இப்படி போ’ என திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். போலீசாக இருக்கலாமோ என வாகன ஓட்டிகள் சந்தேகமடைந்தனர். பிறகுதான் அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது.பின்னர் போக்குவரத்து போலீசாரை திட்ட துவங்கிய அப்பெண், சாலையில் திடீரென டான்ஸ் ஆடினார். தகவலறிந்து அங்கு வந்த மகளிர் போலீசார் அப்பெண்ணை பிடிக்க முயன்றபோது, நடுரோட்டில் படுத்து உருண்டார். போலீசார் மீண்டும் முயன்றபோது அவர்களை தள்ளிவிட்டு, ‘முடிந்தால் என்னை பிடி பார்ப்போம்’ என சவால் விட்டபடியே அங்கிருந்து அழகர்கோவில் சாலையில் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து மகளிர் போலீசார் அவரை பிடிக்கும் முயற்சியை கைவிட்டனர்.விசாரணையில், ‘அந்தப் பெண் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்தவர்; அவ்வப்போது போதையில் தகராறில் ஈடுபடுவது வழக்கம்’ என்றும் தெரிய வந்தது.
Source: Dinakaran