மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1380 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், கடந்த 3 மாதங்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 100 கனஅடிக்கும் குறைவாகவே இருந்தது. நீர்வரத்து குறைவாக இருந்தாலும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக, மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், காவிரி யின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் துணை நதியான பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 847 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 1380 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு வழக்கம்போல் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட திறப்பு குறைவாக உள்ளதால், நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 19.95 அடியாகவும், நீர்இருப்பு 4.08 டிஎம்சியாகவும் உள்ளது. வறண்டு கிடந்த காவிரியில் தண்ணீர் வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Source: Dinakaran