பவானி சாகர் அணை நீர்தேக்க பகுதியில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி பவானி சாகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நீர்தேக்கப் பகுதியில் டோக்கன் பெற்று மண்ணை எடுத்துச் செல்கின்றனர். இது போக எந்திரம் மூலம் தூர்வாரப்படும் வண்டல் மண் அப்படியே டிப்பர் லாரிகளில் ஏற்றப்பட்டு ஒரு லோடு ரூ.800 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். வண்டல் மண் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுப் பணித்துறையினரும் கண்டுகொள்வதில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இடைத்தரகர்கள் இது போன்று பகல் கொள்ளையில் ஈடுபடுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். அரசு உடனடியாக தலையிட்டு வண்டல் மண் விற்பனையை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Source: Dinakaran