ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் 2ம் கட்டமாக மக்கள் 42 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியின் முடிமூடி அணிந்த ஒருவரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யகோரி மனு கொடுத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இன்று 42வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.பொதுமக்கள் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு பிப்ரவரி 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒப்புதல் வழங்கிய நாள் முதல் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். இன்னும் மத்திய, மாநில அரசுகள் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதனால், நாங்கள் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்த ஒருவரிடம் இத்திட்டத்தை ரத்து செய்யகோரி மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்’ என்றனர். இந்த போராட்டத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran