ஊட்டி : அவதூறு வழக்கில் ஆஜராகாத சூர்யா, சத்யராஜ் உட்பட 8 நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஊட்டி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 7.10.2009ல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் கண்டன கூட்டம் நடந்தது. அதில் பல நடிகர்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதைக்கண்டு மன உளைச்சலுக்கு உள்ளான நீலகிரி மாவட்ட பத்திரிக்கையாளர் ரொசாரியோ மரியசூசை என்பவர், ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, சேரன், விவேக், விஜயகுமார், அருண், நடிகை பிரியா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 8 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து 3.1.2012ல் நடிகர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊட்டி கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறி இருந்தனர். இருப்பினும் ஊட்டி கோர்ட் அளித்த சம்மனுக்கு 8 பேரும் பலமுறை ஆஜராகவில்லை. இந்தநிலையில், கடந்த 15ம் ேததி அன்று ஆஜராகுமாறு ஊட்டி கோர்ட் அளித்த சம்மனுக்கும் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி செந்தில்குமார ராஜவேல், 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி 8 பேரும் அளித்த இரு மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், ஜூன் 17ம் தேதிக்குள் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
Source: Dinakaran