ஓசூர்: ஓசூரில் முகாமிட்டிருந்த 25 யானைகள், தேன்கனிக்கோட்டைக்கு விரட்டியடிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள், மக்கள் நிம்மதியடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் 25 யானைகள் முகா மிட்டிருந்தன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தன. யானைகளை விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டினர். இதில் மிரண்ட யானைகள் போடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறி சானமாவு கிராமத்தையொட்டியுள்ள ஓசூர்-தர்மபுரி நெடுஞ்சாலையை கடந்து தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. யானைக்கூட்டம் நெடுஞ்சாலையை கடந்து சென்றபோது பாதுகாப்பு காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. யானைக்கூட்டம், நெடுஞ்சாலையை கடந்த பின்பு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றதை, கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். போடூர்பள்ளம் வனப்பகுதியிலிருந்து யானைக்கூட்டம் வெளியேறியதையடுத்து, அப்பகுதி விவசாயிகள், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இதேபோல், சானமாவு வனப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக 4 யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளையும் தேன்கனிக் கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran