திருவேங்கடம்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் ராஜ். இவர், அப்பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் ஜீவிகா (5), எல்கேஜி படித்து வந்தாள். இந்நிலையில் ஜீவிகாவுக்கு கடந்த 1ம் தேதி திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் நீடித்ததால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி ஜீவிகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டெங்கு தடுப்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி ஜீவிகா நேற்று பரிதாபமாக இறந்தாள்.
Source: Dinakaran