ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில், கடந்த மாதம் 12ம் தேதி முதல் 2வது கட்டமாக போராட்டம் நடத்திவருகின்றனர். நேற்று போராட்டத்தில் கிராமமக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருமாவளவன் பேசியதாவது:ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், ஏராளமான ரசாயனங்களும், கழிவுகளும் இங்கு கொட்டப்படும். இதனால், நிலத்தடி நீர் மாசுபடும். விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்படும். இனிமேல், இங்கு மக்கள் வாழ முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளி விடுவார்கள். பூமிக்கு அடியில் தங்கமே இருந்தாலும் அது மக்களின் வாழ்க்கையை விட உயர்ந்தது அல்ல.நெடுவாசல் போராட்டம் நீர்த்துபோய்விட்டதாக பாஜவினர் தொடர்ந்து கூறிவருவதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை மத்திய அரசு முடக்க பார்க்கிறது. தமிழகத்தில் மக்களைப்பற்றி சிந்திக்காமல், ஒவ்வொரு நாளும் தனது ஆட்சியை தக்க வைப்பது என்பதிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தி வருகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த நினைத்தால் நெடுவாசல் மக்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Source: Dinakaran