தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கீகாரமில்லாத வீட்டுமனை பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டுமனை பத்திரப்பதிவுக்கு தடை நீங்கியது. இருப்பினும் சில கட்டுப்பாடு, அபராதம் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதித்தது. பிளாட்டுகள், வீட்டுமனை பதிவு, புதிய வீடுகள் பதிவு என அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்கள், சிறிய பட்ஜெட்டில் வீடு கட்டி விற்பவர்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.செங்கல், மணல் உள்ளிட்ட வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான தளவாடங்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் பழைய வீடுகள் மராமத்து உள்ளிட்ட அனைத்து பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் வறட்சி காரணமாக தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது. இதனால் கட்டிட தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இன்றைய சூழ்நிலையில், திடீர், திடீரென ஏறி வரும் விலைவாசியை சமாளிக்க முடியாத சிறு கான்ட்ராக்டர்கள் பொருட்களை நீங்களே வாங்கி கொடுங்கள். எங்களுக்கு கூலி மட்டும் கொடுத்து விடுங்கள். கட்டி தருகிறோம் என தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கின்றனர். சம்பளமாக கொத்தனார் ரூ.650, நிமிர்ந்தாள் ரூ.550 முதல் ரூ.600, சித்தாள் ரூ.350 கேட்கின்றனர். இதுதவிர, பலகை அடித்து கம்பி கட்ட முக்காலுக்கு ஒன்றரை அடியில் தரையில் பீம் போட சதுர அடிக்கு ரூ.100, முக்காலுக்கு முக்காலுக்கு சதுர அடிக்கு ரூ.800, ரூப் போட சதுர அடிக்கு ரூ.35, லிண்டல் போட சதுர அடிக்கு ரூ.45 என்றும், ெசன்ட்ரிங் போட இன்ச் அளவை பொறுத்தும் பணம் வசூலிக்கப்படுகிறது. தவிர, போர் போட்டு கொடுக்க வேண்டும். போரில் தண்ணீர் வராவிட்டால் தண்ணீர் விலைக்கு வாங்கி கொடுக்க வேண்டும். மண் நீங்களே அடித்து கொள்ள வேண்டும். காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டுமென்றால் தனியாக பணம் தர வேண்டும். வயரிங், மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும். பிளான் அப்ரூவல் வாங்கி இருக்க வேண்டும், டைல்ஸ், கிரானைட் என கான்ட்ராக்டர்கள் தரும் செலவு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்பட்டியலை பார்க்கும் புதிதாக வீடு கட்ட நினைப்போர், பயந்து போய் விடுகின்றனர். விளைவு… புதிய வீடு கட்டும் திட்டத்தை பலர் ஒத்தி போடுகின்றனர்.கடந்த 6 மாதத்திற்கும் மேலாக கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் இத்தொழிலை நம்பியுள்ள கொத்தனார், நிமிர்ந்தாள், சித்தாள், பலகை கட்டுவோர் என பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், தங்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என்ன செய்வது என வழி தெரியாமல் விழி பிதுங்கி தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் செழிக்க, வழி பிறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலை கேட்கும் தொழிலாளர்கள்மதுரையில் அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் உள்பட பல இடங்களில் தினமும் காலை நூற்றுக்கணக்கில் குவிந்து விடுகின்றனர். சிறிய மராமத்து வேலைக்கு தங்களை அழைக்க யாரும் வர மாட்டார்களா? என அவ்வழியாக செல்பவர்களை நிறுத்தி, பரிதாபமாக வேலை கேட்கின்றனர். இவர்களிடம் சட்டி, மண்வெட்டி, கடப்பாரை போன்றவை எதுவும் இருக்காது. வேலைக்கு அழைத்து செல்பவர்கள், தேவைப்படும் பொருட்களை இவர்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும். காலை 9 மணிக்கு வேலை வருவதாக கூறும் இவர்கள் 9.30 மணிக்கு வேலைக்கு வருவர். மாலை 5 மணிக்கே வேலை முடித்து விட்டு கிளம்பி விடுவர்.
Source: Dinakaran