ஈரோடு: கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே இலவச நோட்டு,புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்சி உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு அரசின் சார்பில் இலவச நோட்டு, புத்தகங்கள், இரண்டு செட் இலவச சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அந்தந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை வைத்து மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இது தவிர வண்ண பென்சில்கள், பென்சில் பாக்ஸ் உள்ளிட்டவைகளும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளிலேயே பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதையடுத்து நேற்று பாடங்கள் நடத்தப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
Source: Dinakaran