சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் சேலம் கேம்ப் பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் காயத்ரி (23). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில் படித்து வந்தார். கடந்த 20ம் தேதி மர்மமான முறையில் இறந்த காயத்ரியின் உடல், உறவினர்களின் போராட்டத்தையடுத்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகள் சாவுக்கு காரணமான அகாடமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கருமலைக்கூடல் போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். காயத்ரியின் உடல் வைக்கப்பட்டுள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு திரண்ட அவரது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று, காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபுவை சந்தித்து பேசினர். அப்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், முதற்கட்டமாக தாட்கோ கடன் மற்றும் பசுமை வீடு வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, காயத்ரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர் அனுமதித்தனர். தொடர்ந்து மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. 4 நாட்களுக்கு பின்னர் காயத்ரியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Source: Dinakaran