Vaigasi Madha Rasipalan | வைகாசி மாத ராசி பலன்கள்! 15.5.2017 முதல் 14.6.2017 வரை

0
835
Share on Facebook
Tweet on Twitter

கொட்டிக் கொடுக்கும் மனம் படைத்த மே‌ஷ ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதைச் செய்ய நினைத்தீர்களோ அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் தாமதப்பட்ட காரியங்கள், இப்பொழுது தடையின்றி நடைபெறும். வீடு மற்றும் வாகனம் வாங்கும் முயற்சிக்கு வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதே நேரத்தில் ராசிநாதன் செவ்வாயையும், பஞ்சமாதிபதி சூரியனையும் சனி பார்க் கிறார். பகை கிரகமான சனி, சப்தம ஸ்தானத்தில் இருந்து இருவரையும் பார்ப்பதால், தொகை வரவு திருப்திகரமாக இருந்தாலும், அவை வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். நீங்கள் தீட்டிய திட்டத்திற்காக வைத்திருக்கும் தொகை, வேறு வழியில் செலவாகி மனதை கவலை கொள்ள வைக்கலாம். இதுபோன்ற காலங்களில் அதிக விழிப்புணர்வு தேவை. அப்பொழுதுதான் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். அதே நேரத்தில் பெற்றோர் வழி உறவிலும் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பது ஒருவழிக்கு நன்மை தான். ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த தேக்க நிலை மாறும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள். தன சப்தமாதி பதியான சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால், இந்த மாதம் உதிரி வருமானம் வந்து உள்ளத்தை மகிழ்விக்கப் போகிறது. வாழ்க்கைத் துணை அல்லது வாரிசுகளுக்கு வேலை கிடைக்கலாம். சஷ்டி விரதமிருந்து சண்முகநாதப் பெருமானை வழிபடுவது நல்லது.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். ராசிநாதன் 3–ல் சஞ்சரிக்கும் பொழுது, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகளின் ஆலோசனை உங்கள் தொழிலுக்கு வரும் இடையூறுகளை அகற்றும். அஷ்ட மாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம், இன்றைக்கு நல்ல விலைக்கு போவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

புதன் பெயர்ச்சிக் காலம்

மே 27–ந் தேதி ரி‌ஷபத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்        பார்த்தபடி வந்து சேரும். வாங்கல்–கொடுக்கல்களில் இருந்த சிக்கல்கள் அகலும். வழக்குகள் சாதகமாக முடியும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து, உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து கொடுப்பர். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

ஜூன் 12–ந் தேதி மிதுனத்தில் புதன் சஞ்சரிக்கப்போகிறார். அந்த நேரத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.

சுக்ர பெயர்ச்சிக் காலம்

மே 28–ந் தேதி மே‌ஷத்துக்கு சுக்ரன் செல்கிறார். இந்த காலத்தில் தனவரவு திருப்திகரமாக இருக்கும். வாகன யோகம் உண்டு. திட்டமிடாமலேயே பயணங்கள் வந்து கொண்டிருக்கும். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். அழகுப் பொருட் களையும், ஆபரணங்களையும் வாங்குவதில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

இம்மாதம் செவ்வாய், சனி பார்வை இருப்பதால் நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு!

உங்கள் ராசிநாதன் செவ்வாயை, குரு பார்ப்பதால் குரு– மங்கள யோகம் உருவாகிறது. எனவே குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெறப் போகின்றது. தங்கு, தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். ஆரோக்கியத்தில்  அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புண்டு; கவனமாக இருங்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தாய்வழி ஆதரவு உண்டு. கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். உங்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை கொடுத்து விட்டு, புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவரால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி பலன் தரும். சனி வக்ர இயக்கத்தில் சஞ்சரிப்பதாலும், செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், மாதத் தொடக்கத்தில் திடீர் விரயம் உண்டு.  அறுபத்து மூவர் வழிபாட்டை மேற்கொண்டால் ஆனந்தம் நிலைக்கும்.

இறை வழிபாடு  : வைகாசி விசாக நாளில் வடிவேலனை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்
:–       மே: 15,16,20,21,25,26,30,31 ஜூன்: 10,11,12


மகிழ்ச்சி தரும் வண்ணம்
:–     பச்சை.

பிறருக்கு வழிகாட்டியாக வாழ விரும்பும் ரி‌ஷப ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து, நீங்கள் தீட்டும் திட்டங்களை வெற்றியடையச் செய்வார்கள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.

குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியின் மீதும், ராசிநாதன் சுக்ரன் மீதும் பதிகின்றது. எனவே நாலாபுறம் இருந்தும் நற்பலன்கள் உங்களைத் தேடி வரப்போகிறது. சூழ்ந்த பகை விலகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்து செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்து சேரலாம்.

உங்கள் ராசியைச் சனி பார்க்கிறாரே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். சனி இப்பொழுது வக்ர இயக்கத்தில் பலம் இழந்து பார்ப்பதால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும்.

உங்கள் ராசியிலேயே சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுகாதிபதி சூரியன் சஞ்சரிப்பது நன்மை தான். ஆனால் சப்தம விரயாதிபதியான செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால், சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம். நட்பு பகைஆகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம்.

தனாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் வீற்றிருப்பதால், ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். அதிலிருந்து விடுபட குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம். ‘மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றனவே’ என்று கவலைப்பட்டவர்கள், புதிய பொருட்களை வாங்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பெற்றோர்களின் மணி விழாக்களை நடத்திப் பார்க்க நேரம் கைகூடி வரும்.

சனி, செவ்வாய் பார்வை இருப்பதாலும், சனியும் சூரியனும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதாலும், திடீர் பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பைரவரையும், அனுமனையும் வழிபாடு செய்வது நல்லது.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். சப்தம விரயாதிபதி செவ்வாய் 2–ல் சஞ்சரிப்பதால், குடும்பச் சுமை கூடும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் மட்டுமின்றி உத்தியோக மாற்றங்களும் வந்து சேரலாம்.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷபத்திற்கு, புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5–க்கு அதிபதியான புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம் தான். உங்கள் வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

ஜூன் 12–ந் தேதி மிதுனத்தில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு ஒரு பொற்காலமாகும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப முன்னேற்றம் கூடும். குழந்தைகளின் வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்

மே 28–ந் தேதி மே‌ஷ ராசிக்கு, சுக்ரன் செல்கிறார். ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகன மாற்றம் செய்ய முன் வருவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். யோக பலம் பெற்ற நாளில் செவ்வாய் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்தால் தடைகள் அகலும்.

பெண்களுக்கு!

இம்மாதத் தொடக்கத்தில் விரயம் அதிகரித்தாலும், பிறகு படிப்படியாக நன்மைகள் வந்து சேரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். தம்பி, தங்கைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடி வரும். தாய்வழி ஆதரவு ஓரளவு கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் வளர்ச்சி கூடுதலாகக் கிடைக்கும்.

இறை வழிபாடு  : சஷ்டிஅன்று சண்முகநாதனை வழிபாடு செய்யுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–      மே: 17,18,22,23,28,29 ஜூன்: 1,2,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–வெளிர்நீலம்.

நகைச்சுவையாகப் பேசிப் பழகும் மிதுன ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வராதா? என்று எண்ணியவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சி அடையும் விதத்தில் அழைப்புகள் வந்து சேரலாம்.

உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியனும், 6,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயும் 12–ல் இணையும் பொழுது பயணங்களால் பலன் வந்து சேரும். புதிய வாகனம் வாங்க வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விபரீத ராஜயோக அடிப்படையில் திடீர் மாற்றங்களைக் காண்பீர்கள்.

கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள், இனி துரிதமாக நடைபெறப்போகிறது. 6–ல் சனி வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். 8–க்கு அதிபதியான சனி 6–ல் வக்ரம் பெறும்பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கிணங்க பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். எதிரிகள் விலகுவர். ஏக்கங்கள் அகலும்.

அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். சுக்ரபலம் நன்றாக இருப்பதால் பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சனி, செவ்வாயைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு மரியாதை குறைவு ஏற்படலாம். எனவே நண்பர்களிடம் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. உங்கள் ராசியிலேயே உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் பிறந்திருந்தால் யோக பலம் பெற்றநாளில் முறையாகப் பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஆனந்த வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமையும்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட நேரிடும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் கிடைத்து இன்னல்கள் அதிகரிக்கும். சகப் பணியாளர்களால் தொல்லை உருவாகும். சமூகத்தில் மதிப்பை தக்கவைத்துக் கொள்ள பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. என்றைக்கோ நடைபெற்ற பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு சகோதரர்கள் உங்களோடு மோதும் சூழ்நிலை ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. ஒருசிலர் வேறு வேலைக்கு முயற்சிப்பர்.

புதன் பெயர்ச்சிக் காலம்

புதன் மே 27–ந் தேதி ரி‌ஷபத்திலும், ஜூன் 12–ந் தேதி மிதுனத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். ரி‌ஷபத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது அதிக விரயம் ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடு கூடும். போதிய மூலதனம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். மிதுன புதன் சஞ்சாரத்தின் பொழுது, மிகுந்த நற்பலன் கிடைக்கும். ராசிநாதன் வலுப்பெறுவதால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆரோக்கியம் சீராகும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி பஞ்சம விரயாதிபதி சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. அவர் களின் கல்வி நலன் கருதியும், கல்யாண வாய்ப்புக் கருதியும் செலவு செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு கிடைக்கும். சொந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு.

இம்மாதம் பகை கிரகங்களின் பார்வை இருப்பதால், தடைகள் அகல யோக நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

பெண்களுக்கு!

உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காணும் மாதமாகும். படிப்பிற்கேற்ற வேலையில் இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். தாய்வழி அனுகூலம் உண்டு. உடன்பிறப்புகளில் ஒருசிலர் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ளமாட்டார்கள். கணவன்– மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஊர் மாற்றம் அமையும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். சலுகைகள் அனைத்தும் மாதக் கடைசியில் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவதோடு, சூரியன், சனி  அடுத்தடுத்து அமர்ந்திருந்து அருள் வழங்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

இறை வழிபாடு  : புதன் கிழமை பெருமாளை  வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–       மே: 15,20,21,23,24,30,31 ஜூன்: 3,4,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  கிளிப்பச்சை.

மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளாத கடக ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான், வக்ர இயக்கத்தில் 3–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 6–க்கு அதிபதி 3–ல் சஞ்சரிப்பது யோகம்தான். அது மட்டுமல்லாமல் தனது வீடான மீனத்தை குரு பார்ப்பதால், முன்னோர்கள் வழிச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீரென விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு சுயதொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும். தந்தை வழி உறவினர்களோடு இருந்த பகைமாறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தனாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில், பாக்யாதிபதி செவ்வாயோடு இணைந்திருப்பதால் காரியங் களில் தொடர்ந்து வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.

அஷ்டமத்தில் கேதுவும், 2–ல் ராகுவும் இருப்பதால் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே முறையான சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும்.

7,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே குடும்ப உறுப்பினர்களைக் கொஞ்சம் அனுசரித்து செல்வதுடன், கோபத்தையும் குறைத்துக் கொள்வது நல்லது. சனி, செவ்வாய் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதால், பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அவர்களின் கல்வி முன்னேற்றம் கருதியும், கடல்தாண்டிச் சென்று படிக்கும் வாய்ப்பை முன்னிட்டும் செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துகள் வாங்குவதற்குத் திட்டமிடுவீர்கள்.

வைகாசி விசாகத்தன்று அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. யோகம் செய்யும் கிரகமான செவ்வாய்க்குரியவர் முருகப்பெருமான். அவரை வழிபாடு செய்ய யோகங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். இதன் விளைவாக சகோதரர்களிடம் பகை வந்து சேரலாம். கவனமாக நடந்து கொள்வது அவசியம். ஒரு சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் வாய்க்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதமாக இடமாற்றங்கள் வந்து மனநிம்மதியைக் குறைக்கலாம். ஆரோக்கியத் தொல்லைக்கான அறிகுறி தோன்றும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

பொன்னான புதன் பெயர்ச்சி

புதன் மே 27–ந் தேதியன்று ரி‌ஷபத்திற்கு, புதன் செல்கிறார். உங்கள் ராசிப்படி விரயாதிபதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது விரயத்திற்கேற்ற லாபத்தைக் கொடுப்பார். விரோதங்கள் விலகும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் பணம் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாகவே வந்து சேரும்.

ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்கு புதன் வரப்போகிறார். அப்பொழுது வெளிநாட்டு அழைப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் சம்பந்தமாகவோ, உல்லாசப் பயணமாகச் சென்று வரும் சூழ்நிலை வாய்க்கும். இக்காலத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி சுக்ரன் மே‌ஷத்திற்குச் செல்கிறார். 4,11–க்கு அதிபதி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்போது தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். தங்கம், வெள்ளி   வாங்குவதில் தனிக் கவனம் செலுத்துவீர்கள். மங்கள ஓசை மனையில் கேட்கும்.

இந்த மாதம் ராகு–கேதுகளுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நன்மை அளிக்கும்.

பெண்களுக்கு!

புதிய திருப்பங்கள் ஏற்படும் மாதம் இது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், ஒரு வழியாக அதைச் சமாளித்து விடுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது தகுதி யான வேலை கிடைக்கும். கணவன்– மனைவி உறவு பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாழன் தோறும் குருவை வழிபடுவது நல்லது.

இறை வழிபாடு  : திங்கள்தோறும் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–     மே: 21,22,25,26  ஜூன்: 1,2,5,6,7

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  பொன்னிற மஞ்சள்

மன தைரியத்தால் காரியங்களை செயல்படுத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன், தொழில் ஸ்தானத்தில் யோகாதிபதி செவ்வாயோடு இணைந்திருக்கிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் இந்த மாதத்தில் வந்து சேரும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக கிடைக்கலாம். இடைப்பட்ட காலத்தில் வந்த எதிரிகள் விலகுவர்.

அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பது ஒரு வழிக்கு நன்மைதான். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவு இனி குறையும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடன்பிறப்புகளுக்கு ஆதரவு கொடுப்பீர்கள். இடம், பூமியால் லாபம் கிடைக்கும் நேரமிது.

சனி வக்ர இயக்கமாக இருந்து செவ்வாயைப் பார்ப்பதால், பூர்வீக இடங்களை விற்று பொருளாதார வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

5,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. அவர்களின் கல்வி நலன் கருதி எடுத்த முடிவு அனுகூலமாகும். அதற்காக சிறிது தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.

குருவின் பார்வை உச்சம் பெற்ற சுக்ரன் மீது பதிவதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். பட்டும், படாமலும் பழகிய உறவினர்கள் இனி பக்கபலமாக இருந்து உதவி செய்ய முன்வருவர்.

ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் இருப்பதால் நன்மைகள் நடக்க வேண்டுமானால் நாக தோ‌ஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்களை முறையாகச்   செய்வது நல்லது.

சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.

இம்மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று விரதமிருந்து, முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று ஜோடி தீபம் ஏற்றி அர்ச்சனைகள் செய்வது நல்லது. வைகாசி விசாகத்தன்று வடிவேலனை வழிபட்டால் கைநிறைய பொருள் குவியும் என்பது நம்பிக்கை.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கின்றார். 4,9–க்கு அதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். இடர்பாடுகள் விலகும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து இணைவர். முன்னோர் வழி சொத்தில் முறையான ஆதாயம் கிடைக்கும். அசையா சொத்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும்.

திருப்பம் தரும் புதன் பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியாக விளங்கும் புதன், மே 27–ந் தேதி ரி‌ஷப ராசிக்கு செல்கிறார். அதன் பிறகு ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்கு செல்கிறார். ரி‌ஷபத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழிலை விரிவு செய்ய மூலதனங்கள் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்போடு வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவார்கள். மிதுனத்தில் புதன் சஞ்சரிக்கும் நேரம் மிகுந்த யோகமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை உச்சம் பெற்ற சுக்ரன், மே 28–ந் தேதி மே‌ஷ ராசிக்குச் செல்கிறார். 9–ம் இடத்தில் சுக்ரன் உலா வரும்பொழுது பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புகழ்கூடும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். மண், பூமி வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். மக்கட்பேறு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும்.

இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனி வலிமை இழந்திருப்பதால் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

பெண்களுக்கு!

முன்னேற்றம் அதிகரிக்கும் மாதம் இது. பொருளாதார நிலை உயரும். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். வாங்கிய வீட்டை விற்று விட்டோமே என்று கவலைப்பட்டவர்கள் மீண்டும் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. மனக்குழப்பங்கள் அகலும். தாய் வழி ஆதரவு திருப்தி தரும். கணவன்–மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்க விதத்தில் அமையும். உத்தியோகத்தில்  உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கலாம். பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. வாய்ப்பு இருப்பவர்கள் ஆறுபடை வீட்டில் ஒரு படைவீட்டிற்குச் சென்று, அழகன் முருகனை வழிபட்டு வருவதன் மூலம்அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

இறை வழிபாடு  : ஞாயிறு தோறும் சிவபெருமானை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:– மே: 15,22,23,28,29 ஜூன்: 3,4,7,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ரோஸ்

தெய்வ நம்பிக்கையில்  அதிக பற்று கொண்ட  கன்னி ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியிலேயே குரு பகவான் வக்ரம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் குருவின் பார்வை 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் மீதும் பதிகிறது. எனவே, முக்கியத் திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் மாதமாக இம்மாதம் அமையப் போகிறது. முக ஸ்துதிக்காக பழகியவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

உங்கள் ராசிக்கு 12–ல் ராகுவும், 6–ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். உத்தியோகத்தில் சிலருக்கு சக ஊழியர்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு புதிய இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். ஜென்ம குருவின் காலத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். வரும் மாற்றங்களைப் பரிசீலித்து ஏற்றுக் கொள்வது நல்லது.

சகோதர ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகளின் வழியே பிரச்சினைகள் உருவாகலாம். அதிலும் சனியை, செவ்வாய் பார்ப்பதால் ஒருசில குடும்பங்களில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும். பஞ்சாயத்துகளுக்கு சகோதர வர்க்கத்தினர் கட்டுப்படுவார்களா? என்பது சந்தேகம் தான். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்பட வேண்டிய நேரமிது.

முரண்பாடான கிரகங்களின் பார்வை பலம் பெற்று இருப்பதால், முன்னேற்றங்களில் தடை ஏற்படாமலிருக்க வராஹி அம்மனை வழிபடுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் சன்னிதியில் கந்த சஷ்டி கவசம் பாடி ஜோடி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். நீங்கள் செய்யும் பரிகாரங்கள், காரியத் தடையில் இருந்து ஓரளவாவது விடுபட வைக்கும்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். இக்   காலத்தில் உடல் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்யவேண்டிய நேரமிது.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷப ராசிக்கு, புதன் செல்கிறார். பிறகு ஜூன் 12–ல் மிதுன ராசிக்குப் புதன் செல்கிறார். இதன் விளைவாக நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரப் போகிறது. ராசிநாதன் 9–ல் சஞ்சரிக்கும் பொழுது ஒளிமயமான எதிர்காலம் அமைய உங்களுக்கு உத்தரவாதம் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். இதுவரை பாசம் காட்டாத பெற்றோர்கள் இப்பொழுது பாசம் காட்ட முன்வருவர்.

மிதுன புதன் சஞ்சாரத்தின் பொழுது, நன்மையே வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி மே‌ஷத்திற்கு, சுக்ரன் செல்கிறார். இக்காலத்தில் விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றம் முதல் நாடு மாற்றம் வரை அவரவர் சுய ஜாதகத்திற்கு ஏற்ற விதத்தில் அமையும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களை மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். பெண் குழந்தைகளின் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் இம்மாதத்தில்,  ஜென்ம குருவால் நன்மைகள் கிடைக்க குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

பெண்களுக்கு!

வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவேண்டிய மாதம்  இது. ஜென்ம குருவின் ஆதிக்கத்தால்  பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், மனநிம்மதி இருக்காது. உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். உடன்பிறப்புகளின் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன்– மனைவி ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடி நடைபெறும். தாய்வழி யில் அனுகூலம் உண்டு. தங்கம், வெள்ளி மட்டுமின்றி விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்களை மாதத்தின் மையப் பகுதியில் வாங்கி மகிழ்வீர்கள். ஆதியந்தப் பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

இறை வழிபாடு  : புதன்கிழமை தோறும் பெருமாள்–லட்சுமியை
வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–   மே: 15,16,25,26,30,31 ஜூன்: 5,6,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  வைலட்.

சுயநலம் இல்லாமல் பொதுநலனில் அக்கறை காட்டும்
துலாம் ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கிறார். அவரை சகாய ஸ்தானாதிபதி குரு பார்க்கிறார். குருவின் பார்வை அவரது வீடான மீன ராசியிலேயே பதிவது யோகம்தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தோள் கொடுத்து உதவும் நண்பர்களின் எண்ணிக்கை கூடும். வெற்றிக்குரிய தகவல் வீடு வந்து சேரும். வீடு மாற்றங்களும், விருப்பப்பட்ட இடத்திற்கு இட மாற்றங்களும் அமையும்.

ஏழரைச் சனி பலம் குறைந்து சஞ்சரிக்கும் நேரமிது. எனவே குடும்பத்தில் அமைதி கூடும். ஒற்றுமை பலப்படும். இதுவரை ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து  விடுபடுவீர்கள். குடும்பப் பெரியவர்கள் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். இல்லத்தில் காலா காலத்தில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் இன்னும் நடைபெறவில்லையே என்ற கவலை அகலும். மங்கள ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும்.

சனி உங்கள் ராசிக்கு 4,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே ஆரோக்கியத் தொல்லை அகலும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். எண்ணங்களை நிறைவேற்ற உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கைநழுவிச் சென்ற பூர்வீகச் சொத்துகள் மீண்டும் உங்களுக்கு வந்து சேரும்.

பஞ்சம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பிரச்சினை உருவாகலாம். பிரச்சினைகள் உருவாகும் பொழுது கலந்து ஆலோசித்து நல்ல முடிவெடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ராசிநாதன் சுக்ரன் 6–ல் உச்சம் பெற்றிருப்பதால், உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளோடு இதுவரை இருந்த பகை மாறும்.

மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்தில் செவ்வாயும், சூரியனும் சஞ்சரிக்கிறார்கள். இதனால் வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனப் பழுதுகளும், வாகனங்களால் தொல்லைகளும் ஏற்படும். இதுபோன்ற காலங்களில் திசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சஞ்சரித்த செவ்வாய் மே 26–ந் தேதி மிதுனத்திற்கு செல்லவிருக்கிறார். இதன் விளைவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழ்நிலை ஏற்படலாம். உடன்பிறப்புகளின் இல்லத் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். இதுவரை சகோதரர்களிடம் பாசம் காட்டிய பெற்றோர், இனி உங்களிடம் பாசம் காட்ட முன்வருவர்.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷப ராசிக்கு, புதன் செல்கிறார். பிறகு ஜூன் 12–ந் தேதி மிதுன ராசிக்கு, புதன் செல்கின்றார். ரி‌ஷப புதன் சஞ்சாரத்தின் போது தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். நாகரிகப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். மிதுன புதன் சஞ் சாரத்தின் பொழுது, மிகச் சிறந்த பலன்களைக் காணப்போகிறீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். விமர்சனங்களுக்கு மத்தியில் வாழ்ந்த நீங்கள் இப்பொழுது மக்களால் போற்றப்படுவீர்கள்.   வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மே‌ஷ சுக்ரனின் சஞ்சாரம்

மே 28–ந் தேதி மே‌ஷத்திற்கு, சுக்ரன் செல்கிறார். இது ஒரு அற்புதமான காலமாகும். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது கல்யாணக் கனவுகள் நனவாகும். கட்டுக் கடங்காத செலவுகளால், கவலைப்பட்ட உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்போடு உயர் பதவிகளும் கூட கிடைக்கலாம். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். டி.வி. பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. அங்காரக பிரீதி செய்வது நல்லது.

பெண்களுக்கு!

சனி வக்ரமும், குரு வக்ரமும் உங்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும் மாதம் இது. ஆரோக்கியத் தொல்லை அகலும். நிதி நிலை உயரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களின் ஒத்துழைப்போடு இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும். கணவன்–மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் விரயம் உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது, கூடுதல் கவனம் தேவை. அரசு வழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

இறை வழிபாடு  : செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–   மே: 17,18,27,28  ஜூன்: 1,2,7,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ஆனந்தா நீலம்.

மனதிற்கு சரியென்றதை மறுகணமே செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருக்க குருபகவானின் பார்வை அதன் மீது பதிகிறது. எனவே இந்த மாதம் தொழில் வளர்ச்சி கூடும் மாதமென்றே சொல்ல வேண்டும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு திருப்தி தரும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர். தன பஞ்சமாதிபதியான குரு, ராசிநாதன் செவ்வாயைப் பார்ப்பதால் சேமிப்பு உயரும்.

ஜென்மச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பது ஒரு வழிக்கு நன்மை தான். ஆரோக்கியத் தொல்லை அகலும். உங்கள் ராசிக்கு 3,4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். எனவே கூடப்பிறந்தவர்களை கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. அவர்களின் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்த ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான குருபகவான், லாப ஸ்தானத்தில் வீற்றிருந்து அவரது வீடான மீன ராசியைப் பார்க்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் இனிய மாற்றங்கள் நிகழும். வீடு வாங்கும் முயற்சியில் காட்டிய விருப்பம் நிறைவேறும். வெற்றிக்குரிய தகவல் வீடு வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டு. புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்ல புதிய வழிபிறக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி வந்து சேரும். தொழில் செய்பவர்களாக இருந்தால் கிளைத் தொழில் தொடங்க கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நாங்களும் பங்குதாரர்கள் ஆகின்றோம் என்று நண்பர்களிடம் நம்பிக்கைக்குரியவர்கள் முன்வருவர். சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்க வழிபிறக்கும்.

ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக ஆனைமுகப்பெருமானையும், அனுமனையும், சனி பகவானையும் வழிபாடு செய்யுங்கள். ராசிநாதன் ரி‌ஷபத்தில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியம் நிறைவேற பிரதோ‌ஷ விரதமிருந்து நந்தியெம்பெருமானையும், சிவனையும், உமையவளையும் பிரதோ‌ஷ நேரத்தில் வழிபட்டு வாருங்கள்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிக்கப் போவதால் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. அதுமட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவதன் மூலம் கொள்கையை நிலைநாட்ட இயலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள். இடம், பூமி விற்பனையில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாகன மாற்றம் செய்வதற்கு உகந்த நேரமிது.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷப ராசிக்குப் புதன் செல்கிறார். பிறகு ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்கு புதன் செல்கிறார். மாமன்காரகன் என்று அழைக்கப்படும் புதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும்.வெளிநாட்டு அனுகூலம் உண்டு. ஆதாயம் தரும் தகவல் அடுக்கடுக்காக வந்து சேரும். ஜூன் 12–க்கு மேல் மிதுன புதனின் ஆதிக்கம் வருவதால் பொருளாதார நிலை உயரும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

மே‌ஷ புதன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி மே‌ஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம விரயாதிபதி 6–ல் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணையாலும், வாரிசுகளாலும் விரயங்கள் ஏற்படலாம். அதை சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கலாம். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அடுக்கடுக்காக வரும் ஒப்பந்தங்கள் ஆச்சரியப்பட வைக்கும்.

இம்மாதம் விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது வேண்டிய நன்மைகளை வழங்கும்.

பெண்களுக்கு!

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் மாதம் இது. உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் பணிபுரிவீர்கள். நிதி நிலை உயரும். நிகழ் காலத் தேவைகள் அப்போதைக்கப்போது பூர்த்தியாகும். செவ்வாய் சனி பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு. எனவே ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். சுய ஜாதகத்தில் தெசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்யுங்கள். கணவன்–மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்க விதம் அமையும். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் சுபகாரியங்களைச் செய்து முடிக்க சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். பவுர்ணமியன்று கிரிவலம் வருவதன் மூலம் பலன்களை அதிகம் பெறலாம்.

இறை வழிபாடு  : செவ்வாய் தோறும் துர்க்கையை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–       மே: 15,16,20,21,30,31 ஜூன்: 3,4,5,10,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–       கிரே.

தன்னைத் தானே கவனிப்பதில் அக்கறை கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஏற்றுக் கொண்ட பணிகளை செவ்வனே முடிக்க ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருந்தாலும் அதன் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் அச்சுறுத்தும் நோய்களைப் போக்க ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. மாற்று மருத்துவம் உடல் நலத்தைச் சீராக்கும். மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வீடுகட்டுவது அல்லது வாங்குவது சம்பந்தமாக  முயற்சிகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கூடும்.

6–ம் இடத்தை குரு பார்ப்பதாலும், 6–ம் இடத்தில் செவ்வாய் சூரியன் சேர்க்கை இருப்பதாலும் அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதியபொறுப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். புதிய மாற்றங்களும் அதன் மூலம் ஏற்றங்களும் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எளிதில் வந்து சேரலாம்.

விரயச் சனி வக்ரமாக இருக்கும் இந்த நேரத்தில், சுபவிரயங்களைச் செய்வது நல்லது. ஒருசிலருக்கு பெற்றோர்களின் மணிவிழா, சதாபிஷேக விழா போன்றவற்றை நடத்திப் பார்க்கும் சூழ்நிலை உருவாகும். பெண்களின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடி நடைபெறும். புதிய வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். அதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவி கிடைக்கும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். சனியின் சன்னிதியில் சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் வைகாசி விசாகத் திருநாளில் கந்தப்பெருமானை கைகூப்பித் தொழுதால் வந்த துயரங்கள் விலகி ஓடும். வளர்ச்சி கூடும்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5,12–க்கு அதிபதியான செவ்வாய், மே 26–ந் தேதி மிதுனத்திற்கு செல்கிறார். இதன் வழியாக பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய வாய்ப்புகள் கைகூடி வரும். அவர்கள் மேற்படிப்பு படிப்பதை முன்னிட்டு அதற்குரிய படிப்பில் சேர வழிவகை செய்து கொடுப்பீர்கள். வெளிநாடு சென்று படிக்க வேண்டுமென்று ஆசைப்படும் பிள்ளைகளுக்கு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க முன்வருவீர்கள். சலுகைகளும் எளிதில் கிடைக்கும்.

பொன்னான புதன் சஞ்சாரம்

மே 27–ந் தேதி ரி‌ஷபத்திற்குப் புதன் செல்கிறார். பிறகு ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்கு, புதன் செல்கிறார். ரி‌ஷபத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, வேலை கிடைத்து உதிரி வருமானம் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

மிதுனத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது கல்யாண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்கள் பகை அகலும். வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் நேசமும், பாசமும் அதிகரிக்கும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி மே‌ஷ ராசிக்கு, சுக்ரன் செல்கிறார். 6–க்கு அதிபதி சுக்ரன் 5–ல் சஞ்சரிக்கும் பொழுது, வாரிசுகளின் வழியில் வருமானங்கள் வந்து சேரும். குறிப்பாக பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். அதிகாரிகளின் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துகளில் இதுவரை முடிவடையாத பஞ்சாயத்துகள் நல்ல முடிவுக்கு வரும். வாய்ப்பிருக்கும் பொழுது குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு!

சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் மாதம் இது. சென்ற மாதத்தைக் காட்டிலும் செல்வநிலையில் ஒருபடி உயரும். தாய்வழி ஆதரவு உண்டு. சகோதர வர்க்கத்தினரில் ஒருசிலர் உங்களை விட்டு விலகினாலும், மாதக் கடைசியில் மீண்டும் வந்து இணைவர். கணவன்– மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்குவது பற்றி குடும்பத்தினர் பரிசீலிப்பர். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். புதிய உத்தியோகங்கள் ஒருசிலருக்கு அமையும். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். ஏழரைச் சனி நடப்பதால் விரயங்களில் இருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவை. அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

இறை வழிபாடு  :வாரம் தோறும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:–       மே: 17,18,22,23 ஜூன்: 1,2,5,6,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ஆரஞ்சு

அதிகாரம் மிக்கவர்களை அன்பால் மாற்றிக் காட்டும் மகர ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். தனாதிபதியாக விளங்கும் சனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால், பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். சுப விரயங்களை செய்தால், வீண் விரயங்களை தடுக்கலாம். குறிப்பாக 2–ல் கேது இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினை உருவாகலாம்.

3–ம் இடத்தில் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கிறார். 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெற்றிருப்பது நன்மைதான். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வளர்ச்சியில் ஏற்பட்ட தடைகள் அகல, வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இணைந்திருக்கின்றனர். அவர்களை குரு பார்ப்பதால் இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் நன்மை, வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

குரு – மங்கள யோகம் இருப்பதால் விலகிச் சென்ற வரன்கள் விரும்பி வந்து சேரலாம். இதுவரை இருந்த தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும். ஆக்கப்பூர்வமாக நீங்கள் ஈடுபட்ட செயல்களில் வெற்றி கிடைக்க ராகு–கேதுகளுக்கு பிரீதி செய்வது நல்லது. 2,8 ஆகிய இடங்களில் ராகு–கேதுகள் இருக்குமேயானால் சேமிப்பு கரைய வாய்ப்புண்டு. வறண்ட நிலை மாறி வளர்ச்சி நிலை உருவாக நாகசாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் அனுகூல ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது.

சனி, செவ்வாய் பார்வை இருந்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகமாகும். உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ வைத்தியச் செலவுகள் வந்துகொண்டே இருக்கும். ரோகாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி கேட்டு நடந்து கொண்டால் அச்சுறுத்தும் நோய்கள் அகன்றுஓடும். பிரதோ‌ஷ நேரத்தில் நந்தி தேவரை வழிபடுவது நல்லது. வைகாசி விசாகத்தன்று வடிவேலனை மாங்கனி வைத்து வழிபட்டு வாருங்கள். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6–ல் சஞ்சரிக்கும் பொழுது, வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ புதிய வழி பிறக்கும். ஒருசிலருக்கு சொத்து விற்பனையின் மூலம் லாபம் கிடைக்கும். இது போன்ற காலங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டில் உள்ளவர்கள் தாய்நாடு திரும்பும் சூழ்நிலை உருவாகலாம். வேலையில் பிரச்சினை அல்லது ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படுவதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து திரும்பும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷப ராசிக்குப் புதன் செல்கிறார். ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்குப் புதன் செல்கிறார். ரி‌ஷபத்தில் புதன் சஞ்சரிக்கும் காலத்தில் கல்வி நலன் கருதி செலவிடுவீர்கள். பிள்ளைகள் பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டு செயல்படுவர். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். வியாபாரம் சூடுபிடிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். மிதுன புதனின் சஞ்சாரத்தின் பொழுது உத்தியோக மாற்றங்கள் ஒரு சிலருக்கு உறுதியாகலாம். சம்பள உயர்வு பற்றிய சந்தோ‌ஷத் தகவல் வந்து சேரும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5,10–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மே 28–ந் தேதி மே‌ஷத்திற்குச் செல்கிறார். 4–ல் சுக்ரன் வரும்பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம்தேடி வரும். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பிணிகளிலிருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளின்முன்னேற்றம் கூடுதலாகக் கிடைக்கும். இழந்த பதவியை ஒருசிலர் மீண்டும் பெறுவர். மேற்கு நோக்கிய துர்க்கை வழிபாட்டின் மூலம் மேன்மைகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு!

இம்மாதம் உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாதத் தொடக்கத்தில் தன்னம்பிக்கையும், தைரியமும் தேவை. கொடுக்கல்–வாங்கல் களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணவன்–மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தாய் வழி ஆதரவு கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றங்கள் உருவாகலாம். உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

இறை வழிபாடு  : ஞாயிறு தோறும் துர்க்கையை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:
–   மே: 19,20,23,24 ஜூன்: 3,4,7,8,9


மகிழ்ச்சி தரும் வண்ணம்
:–  கருநீலம்.

சமயோசித புத்தியால் தகுந்த ஆலோசனைகளை வழங்கும் கும்ப ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10–ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12–ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குவதால், சனியின் இந்த வக்ர இயக்கம் தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். தொகை வரவு திருப்தி தரும். ஆரோக்கிய தொல்லை அகலும். அச்சுறுத்தும் நோய்கள் விலகும். புதிய பாதை புலப்படும்.

‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப சில மாதங் களாக ஸ்தம்பித்து நின்ற தொழில் இப்பொழுது வெற்றி நடைபோடும். பகையாக இருந்தவர்கள் உறவாவர். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் 2–ம் இடத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் குரு. அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கோபத்தின் காரணமாக நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். வக்ர குரு மாறும் வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

சகோதர காரகன் செவ்வாய், சுக ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த செவ்வாய், சூரியனை சனிபகவான் சப்தம பார்வையாக பார்க்கிறார். சனி வக்ரமடைந்து பார்ப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பெற்றோர் வழியிலும், உடன்பிறப்புகள் வழியிலும் பிரியம் குறையலாம். குருவின் பரிபூரண பார்வை செவ்வாய் மீது பதிவதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

உங்கள் ராசியிலேயே கேதுவும், 7–ல் ராகுவும் சஞ்சரித்து, சர்ப்ப தோ‌ஷத்தை உருவாக்குகிறார்கள். ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது எதையும் ஸ்திரமாகச் செய்ய இயலாது. எடுத்த முடிவுகளை அடிக்கடி மாற்றுவீர்கள். ஏதேனும் பிரச்சினைகளுக்கு முடிவெடுப்பதாக இருந்தால், குடும்பப் பெரியவர்களை கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும் செய்து கொள்ளுங்கள். அனுகூலமான நாட்களில் அசுர கிரகங்களுக்கு உரிய ஆலயங்களில் உங்களுக்கு ஏற்ற ஆலயங்களை சுயஜாதக ரீதியாகத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் வழிபாட்டிலும் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் அதிகரிக்கும்.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகள் ஓரளவு ஒத்துவருவர். தொழில் பங்குதாரர்களாக இருந்தால் தங்களுக்குரிய பங்கை பிரித்துக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவர்.  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சாயத்துகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். அதிரடியாகவும் சில முடிவுகள் எடுத்து ஆச்சரியப்பட வைப்பீர்கள்.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷபத்திற்கு புதன் செல்கிறார். பிறகு ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் 4–ல் சஞ்சரிக்கும் பொழுது, இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். மங்கள ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பகை பாராட்டிய உறவினர்கள் நெருங்கி வந்து பேசுவர். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மிதுன புதனின் சஞ்சாரம் யோகமான நேரமாகும். பிள்ளைகள் வழியில் நல்ல மாற்றங்கள் உருவாகும். அவர்களின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி மே‌ஷ ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். 4,9–க்கு அதிபதியான சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய பாதை புலப்படும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை அகலும். பொருளாதார நிலை மேம்படும். வாகன யோகம் உண்டு. வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

பெண்களுக்கு!

மாதத்தின் முதல் வாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. மே 26–க்கு மேல் கூடப்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர். பிள்ளைகள் தங்கள் பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்வர். வருமானம் போதுமானதாக இருக்கும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழ்வீர்கள். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். எதிர்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு. குருவக்ர இயக்கத்தில் இருப்பதால் எந்தக் காரியத்திற்கும் முடிவெடுக்க வேண்டுமானால் குடும்பப் பெரியவர்களை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. சஷ்டி விரதமிருந்து சண்முகநாதப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். சந்தோ‌ஷம் கிடைக்கும்.

இறை வழிபாடு  : பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது நல்லது.

வளம் தரும் நாட்கள்:–  மே: 20,21,25,26 ஜூன்: 5,6,10,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ஆரஞ்சு

தன்னம்பிக்கை இருந்தால் முன்னேறலாம் என்று சொல்லும் மீன ராசி அன்பர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியிலேயே சுக்ரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுகிறார். எனவே எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். நடைபெறும் என்று நினைத்த காரியம் நடைபெறாமல் போகலாம். நடைபெறாது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கலாம். முரண்பாடான கிரகங்களின் பார்வை படும் பொழுது, திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.

இம்மாதத்தில் காரியங்களைத் தொடங்கிவிட்டால், அதற்குரிய ஒத்துழைப்பும் பொருளாதார வசதியும் தானாக வந்து சேரும். 2–ல் புதன் இருப்பதால் கனிவாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உணவு பதார்த்தங்களால் ஏற்பட்ட ஒவ்வாமை நோய் மாறும். லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் தொழில் முன்னேற்றமும், லாபமும் வந்தாலும் அதைச் சேமிக்க இயலுமா? என்பது சந்தேகம் தான்.

சுப விரயங்கள் அதிகரிக்கும். உல்லாச பயணங்களால் உற்சாகம் அதிகரிக்கும். ஆன்மிகச் சுற்றுலாக்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சாட்சி கையெழுத்திட்டதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். நீங்கள் எடுக்கும் புது முயற்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். சூரியன் 3–ல் சஞ்சரிப்பதால் அரசியலில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாறலாம். சனி, சூரிய பார்வை இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வருவது போல் தோன்றி வராமல் போகலாம்.

ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருக்கும்பொழுது அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தில் பாதிப்பு கள் ஏற்படும். எதிர்மறைச் சிந்தனைகள் மேலோங்கும். இடமாற்றம் செய்யலாமா, வீடுமாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். கொடுக்கல்–வாங்கல்களில் குழப்பம் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. எனவே வக்ரம் பெற்ற குருவால் வளர்ச்சி ஏற்பட வியாழன் தோறும் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள். அதுமட்டுமல்லாமல் குருபீடமாக விளங்கும் திருச்செந்தூருக்கு யோகம் தரும் நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

மிதுன செவ்வாய் சஞ்சாரம்

மே 26–ந் தேதி மிதுன ராசிக்கு, செவ்வாய் செல்கிறார். 2,9–க்கு அதிபதியான செவ்வாய் 4–ல் சஞ்சரிக்கும் பொழுது பூமியால் யோகம் உண்டு. பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு கூடும். சகோதரர்கள் பகை மறந்து பாசம் காட்டுவர். அரைகுறையாக நின்ற பணிகள் அனைத்தும் நடைபெறத் தொடங்கும். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.

பொன்னான புதன் பெயர்ச்சி

மே 27–ந் தேதி ரி‌ஷபத்திற்கு புதன் செல்கிறார். பிறகு ஜூன் 12–ந் தேதி மிதுனத்திற்கு புதன் செல்கிறார். ரி‌ஷபத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது வழக்கில் வெற்றி கிடைக்கும். வாய்தாக்கள் ஓயும். உடன்பிறப்புகளால் ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். மூத்த சகோதரத்தோடு ஏற்பட்ட மோதல்கள் அகலும்.

மிதுன புதனின் சஞ்சாரத்தின் பொழுது கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. கேந்திர ஸ்தானத்தில் புதன் பலம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வாங்கிய இடத்தை ஒருசிலருக்கு விற்க நேரிடும். வளர்ச்சிப் பாதையில் ஒருசில குறுக்கீடு சக்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் வரவில்லையே என்று பதற்றம் அடைவீர்கள்.

மே‌ஷ சுக்ரன் சஞ்சாரம்

மே 28–ந் தேதி மே‌ஷ ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதி 2–ல் சஞ்சரிக்கும் பொழுது குடும்பச் சுமை கூடும். குடும்ப பிரச்சினைகளும் அதிகரிக்கும். மனச்சோர்வு ஏற்படும். தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். கைமாற்று கடன்  வாங்கும் சூழ்நிலை கூட ஒருசிலருக்கு உரு வாகலாம். அறுபத்துமூவர் வழிபாடு ஆனந்தமயமான வாழ்வை வழங்கும்.

பெண்களுக்கு!

திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் மாதமிது. வரவும் கூடுதலாக இருக்கும். செலவும் கூடுதலாக இருக்கும். மனக்கவலை மாற மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெற்றோர் வழி ஆதரவு ஓரளவு கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மாதத்தின் மையப் பகுதியில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். விசாகத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

இறை வழிபாடு  : வியாழக்கிழமையன்று நவக்கிரகத்திலுள்ள குருவை வழிபடுங்கள்.

வளம் தரும் நாட்கள்:– மே: 17,18,23,24,28 ஜூன்: 7,8,9,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:–  ஆனந்தா நீலம்.

  • TAGS
  • Tamil Month Rasipalan
SHARE
Facebook
Twitter
Previous articleகள்ளக்குறிச்சி, ஏற்காட்டில் பேருந்துகள் நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
Next articleபேருந்துகளை மறித்தாலோ, இடையூறு செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply